மூத்த வக்கீல் பாலி நாரிமன் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல்
மூத்த வக்கீல் பாலி நாரிமன் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல்
ADDED : பிப் 22, 2024 07:14 AM
பெங்களூரு: காவிரி நதிநீர் வழக்கில், கர்நாடகா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய, மூத்த வக்கீல் பாலி நாரிமன் மறைவுக்கு, கர்நாடகா சட்டசபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும், ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடகா சட்டசபையில் உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் பாலி நாரிமன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது காங்கிரஸ், பா.ஜ., உறுப்பினர்கள் பேசினர்.
அமைச்சர் எம்.பி.பாட்டீல்: இந்த நாடு கண்டிராத, தலைசிறந்த வக்கீல்களில் பாலி நாரிமனும் ஒருவர். மனிதநேயவாதி. அவர் தனது தொழிலில் மதிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
நான் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக, அவருடன் விவாதித்தது மறக்க முடியாத அனுபவம். கர்நாடகாவின் நியாயமான கோரிக்கையை முன்வைத்து பேசுவார்.
அவருடன் எனக்கு தனிப்பட்ட முறையில், நல்ல நட்பு இருந்தது. அனைத்து புள்ளி விபரங்களையும் மறக்காமல் வைத்திருப்பார். ஒரு கட்டத்தில் பாலி நரிமனுக்கு, கர்நாடகா அரசு அதிக கட்டணம் கொடுப்பதாக வதந்திகள் பரவின.
இதனால் கர்நாடகா சார்பில் வழக்குகளில் இருந்து வாபஸ் பெறுவதாக கூறினார். அவரை வற்புறுத்தி மீண்டும், அரசுக்கு ஆதரவாக வாதாட வைத்தேன். அவரது மறைவை தாங்கும் சக்தியை, அவரது குடும்பத்திற்கு இறைவன் வழங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
அமைச்சர் எச்.கே.பாட்டீல்: கர்நாடகாவின் நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக வழக்குகளில், பாலி நாரிமனை பல முறை சந்தித்துப் பேசி உள்ளேன். அரசு கொடுக்கும் ஆவணங்களை உன்னிப்பாக கவனிப்பார். ஏதாவது தவறு இருந்தால், 'மிஸ்டர் மினிஸ்டர், என்ன இது?' என்று கேட்பார்.
கல்லுாரி மாணவர்கள், முதல்வரை கண்டு பயப்படுவது போல, பாலி நாரிமனை கண்டு நாங்கள் பயந்து உள்ளோம். திறமையான வாதாடி, நியாயம் பெற்றுத் தருவதில் சிறந்தவர். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை: பாலி நாரிமனின் 91 வயதில் மரணம் அடைந்துள்ளார். நீதி தொடர்பாக இருக்கும் நபர் அவர். நிறைய அனுபவம் கொண்டவர். நியாயமான வழக்குகளில் மட்டும் வாதாடினார். கர்நாடகாவுக்கு அனுகூலமாகவும் வழக்குகளில் வாதாடியவர்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., மாறி, மாறி ஆட்சிக்கு வரும்போது, காவிரி நீர் பிரச்னையில், தமிழகம் சார்பில் வாதாடும் வக்கீல்களை மாற்றினர். ஆனால் கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பாலி நாரிமனை மாற்றவில்லை.
பா.ஜ., உறுப்பினர் சுரேஷ்குமார்: நமது நாட்டின் மூத்த வக்கீல் பாலி நாரிமன் மறைவு இரங்கல் தெரிவிக்க, முழு ஆதரவு தருகிறோம். நேர்மையான வக்கீல் என்றால், முதலில் நமது ஞாபகத்திற்கு வருவது நாரிமன் தான்.
நாங்கள் நீதிபதிக்கு பயப்படுவதை விட, நாரிமனுக்கு அதிகம் பயந்து உள்ளோம். அவர் வாதிட்டால் நமக்கு நியாயம் கிடைக்கும். அவரது மறைவுக்கு நமக்கு பேரிழப்பு. இன்னொரு நாரிமன் வருவது கஷ்டம்.
உறுப்பினர்கள் பேசி முடித்ததும், பாலி நாரிமன் மறைவுக்கு, சட்டசபையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.