அரசு அலுவலகங்களில் 'தம்' அடிக்க தடை! ஊழியர்களுக்கு கர்நாடகா அதிரடி 'தடா'
அரசு அலுவலகங்களில் 'தம்' அடிக்க தடை! ஊழியர்களுக்கு கர்நாடகா அதிரடி 'தடா'
ADDED : நவ 08, 2024 03:53 PM

பெங்களூரு; அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்த கர்நாடகா அதிரடியாக தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
கர்நாடக அரசு அலுவலகங்களில், சட்டப்பூர்வ எச்சரிக்கைகளை மீறி, வளாகங்களில் ஊழியர்கள் சிகரெட் பிடிப்பது, புகையிலை பொருட்களை மெல்லுவது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. ஊழியர்கள் உடல்நலம், பொதுமக்களை பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருட்களை அரசு அலுவலர்கள் உட்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான எச்சரிக்கை வாசகங்களுடன் கூடிய அறிவிப்பு பலகை, அலுவலகங்களில் பொருத்தமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதை மீறி, அலுவலகம் அல்லது அலுவலக வளாகங்களில் புகையிலை பொருட்கள்( குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை) போன்றவற்றை உட்கொள்வது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோன்று பொது இடத்தில் போதை தரக்கூடிய எந்த ஒரு பானத்தையும், போதை பொருளை உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்ப்டடு உள்ளது.

