வாரணாசியில் ரூ.18.5 கோடியில் கர்நாடகா பவன் கட்ட திட்டம்
வாரணாசியில் ரூ.18.5 கோடியில் கர்நாடகா பவன் கட்ட திட்டம்
ADDED : மார் 20, 2025 07:20 AM
பெங்களூரு : ''வாரணாசியில் 18.5 கோடி ரூபாய் செலவில் கர்நாடக பவன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது,'' என மேல்சபையில் ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
மேல்சபையில் ம.ஜ.த., உறுப்பினர் டி.ஏ.ஷ்ரவணா கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:
ஆந்திர மாநிலம் திருமலையில் அம்மாநில ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட 1,576 சதுர அடி நிலத்தில், கர்நாடக அரசுக்கு சொந்தமான, கர்நாடகா பவன் கட்டப்பட்டு உள்ளது.
அதேவேளையில் வி.வி.ஐ.பி.,க்களுக்கான கிருஷ்ணதேவராயா, ஸ்ரீ கிருஷ்ண ராஜேந்திர உடையார் கல்யாண மண்டபம் கட்டும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் திறக்கப்படும்.
திருமலையில் கர்நாடக பவனுக்காக, 2022 - 23 வரை 4 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. இங்கு 51 அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் சீருடை அணிய உத்தரவிடப்படும்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், 1928ல் அப்போதைய மைசூரு மஹாராஜா, பக்தர்களுக்காக சத்திரம் கட்ட ஏற்பாடு செய்தார். இந்த கட்டடத்தின் ஒரு பகுதி 2024 செப்டம்பர் 21ல் இடிந்து விழுந்தது. எனவே, பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
என் தலைமையில் 2024 அக்டோபர் 29ல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பழைய கட்டடம் முழுதும் சேதமடைந்து உள்ளது.
கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் விரிசல்கள் காணப்படுவதாக, தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்தனர்.
எனவே, இந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டலாம் என்று பொதுப்பணி துறை முடிவு செய்து உள்ளது.
கர்நாடக முதன்மை கட்டட நிபுணர், பொதுப்பணி துறை அதிகாரிகள் இணைந்து இடத்தை ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
18.5 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.