பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு
பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு
ADDED : ஏப் 19, 2025 08:04 AM

பெங்களூரு: பொது நுழைவுத் தேர்வில், மாணவர்கள் அணிந்திருந்த பூணூல் அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பொது நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு சில மாணவர்கள் பூணூல் அணிந்து இருந்தனர். அவர்களிடம் பூணூலை அகற்ற கோரி, தேர்வு அதிகாரி வற்புறுத்தி உள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதம் தொடர்பான அடையாளங்களை அகற்ற சொன்ன தேர்வு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் கூறியதாவது: இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிதர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் இருந்தும் இதே போன்று புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரித்து வருகிறோம்.
எந்த நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் கூட, பூணூலை அகற்ற ஒருபோதும் அறிவுறுத்தப்படவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம், என்றார்.