டிக்கெட் வழங்காமல் போனில் அரட்டை: கர்நாடக ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட்
டிக்கெட் வழங்காமல் போனில் அரட்டை: கர்நாடக ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட்
ADDED : ஆக 01, 2025 05:12 AM

பெங்களூரு:கர்நாடகாவில், நீண்ட வரிசையில் பயணியர் காத்திருப்பதை பற்றி கவலைப்படாமல், 'மொபைல் போனில்' அரட்டை அடித்த ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் உள்ள யாத்கிர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கிளர்க்காக பணியாற்றுபவர் மகேஷ். இவர் பணியில் இருந்தபோது டிக்கெட் வழங்காமல் மொபைல் போனில் அரட்டை அடித்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
அதில், டிக்கெட் கவுன்டர் முன் ஏராளமான பயணியர் ரயில் டிக்கெட் பெற நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், கிளர்க் மகேஷ் அவர்களை பற்றி கவலைப்படாமல் இருக்கையில் அமர்ந்தபடி யாருடனோ மொபைல் போனில் அரட்டை அடித்து கொண்டிருந்தார்.
இதனால் வரிசையில் காத்திருந்தவர்கள், 'டிக்கெட் கொடுங்கள், ரயில் வந்துவிடப்போகிறது' என கூறியபடி கொந்தளித்தனர்.
இதையடுத்து பயணி ஒருவர் கிளர்க் அருகே சென்று, 'டிக்கெட் கொடுங்க' என, கூறுகிறார். ஆனால் அப்போதும், 'ஒரு நிமிஷம் காத்திருங்க வர்றேன்' என கூறியபடி போனில் அரட்டையை தொடர்கிறார்.
இவ்வாறு, 15 நிமிடங்களுக்கு மேல் அவர் போனில் தொடர்ந்து பேசுகிறார். இதனால் பயணியர் ஆவேசமடைந்து சத்தமிட்டதால், வேறு வழியின்றி போன் இணைப்பை துண்டித்துவிட்டு கிளர்க் டிக்கெட் வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
கிளர்க் மகேஷ், பணி நேரத்தில் டிக்கெட் வழங்காமல் போனில் பேசும் வீடியோவை பதிவு செய்த பயணி ஒருவர், அதை ரயில் நிலைய அதிகாரிக்கு வாட்ஸாப்பில் அனுப்பினார்.
இதன்படி தென் மத்திய ரயில்வேயின் குண்டக்கல் டிவிஷன் அதிகாரிகள், பணியில் அலட்சியமாக இருந்த கிளர்க் மகேஷை சஸ்பெண்ட் செய்தனர்.

