கங்கா ஆரத்தி குறித்து வாரணாசியில் ஆய்வு 2 நாளில் அறிக்கை அளிக்கிறது கர்நாடக குழு
கங்கா ஆரத்தி குறித்து வாரணாசியில் ஆய்வு 2 நாளில் அறிக்கை அளிக்கிறது கர்நாடக குழு
ADDED : செப் 22, 2024 11:33 PM

கங்கா ஆரத்தி போன்று, காவிரி ஆரத்தி நடத்துவது குறித்து, ஆய்வு செய்ய விவசாயத் துறை அமைச்சர் செலுவராயசாமி தலைமையில், 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் குழுவினர், வாரணாசி சென்று உள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின், வாரணாசியில் கங்கா ஆரத்தி போன்று, கர்நாடக ஜீவநதியான காவிரி ஆற்றிலும் நடத்த, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைச்சர் செலுவராயசாமி தலைமையில், 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினரும் வாரணாசிக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வாரணாசியில் அமைச்சர் செலுவராயசாமி, நேற்று அளித்த பேட்டி:
மைசூரு தசரா நேரத்தில், கங்கா ஆரத்தியை போன்று காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என, அரசு விரும்புகிறது. சம்பிரதாயப்படி காவிரி ஆரத்தி நடத்த வேண்டும். எனவே கங்கா ஆரத்தி எப்படி நடத்தப்படுகிறது என்பதை, ஆய்வு செய்தோம்.
காவிரி ஆரத்தி நடத்த வேண்டும் என, ஆலோசனை நடந்த போது, கங்கா ஆரத்தி ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இன்னும் இரண்டு நாட்களில் ஆய்வு அறிக்கை அளிப்போம். ஹரித்வார் மற்றும் வாரணாசியில் மாறுபட்ட முறையில், கங்கா மஹாசபா சொசைட்டி சார்பில் நிகழ்ச்சி நடக்கிறது.
ஹரித்வாரில் நடக்கும் கங்கா ஆரத்திக்கு, 100 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு உள்ளது. வாரணாசியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு உள்ளது. கங்கையை போன்று காவிரியும், முக்கியமான ஆறாகும்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பலியான போது வெள்ளம் கட்டுக்குள் வர வேண்டும் என்பதற்காக, ஆரத்தி நிகழ்ச்சி துவங்கியதாக ஐதீகம். கர்நாடகாவில் நல்ல மழை பெய்யட்டும், நதி விவாதங்கள் முடிவுக்கு வர வேண்டும் என, காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்துவோம். எங்கு, எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து, முதல்வர், துணை முதல்வருடன் ஆலோசித்து, முடிவு செய்வோம்.
அதிகாரிகளை அனுப்பி மேலும் தகவல் பெறுவோம். ஒரு முறை நிகழ்ச்சி துவங்கிய பின், நிறுத்த கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி ஆரத்தி தொடர வேண்டும். எனவே நன்கு ஆலோசித்து நிகழ்ச்சி நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தினேஷ் கூலிகவுடா, எம்.எல்.சி.,
- நமது நிருபர் -