கரூர் நெரிசல் வழக்கு: விஜயிடம் சிபிஐ விசாரணை நிறைவு
கரூர் நெரிசல் வழக்கு: விஜயிடம் சிபிஐ விசாரணை நிறைவு
UPDATED : ஜன 19, 2026 04:47 PM
ADDED : ஜன 19, 2026 10:39 AM

புதுடில்லி: கரூர் நெரிசல் வழக்கில் இன்று (ஜனவரி 19) 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விஜயிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில், விஜய் கடந்த 12ம் தேதி ஆஜரானார். அவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விஜயிடம் விசாரணை முடியாத நிலையில், பொங்கலுக்கு பின் விசாரணைக்கு ஆஜராவதாக சி.பி.ஐ., அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள், ஜன., 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பினர். அதை ஏற்றுக்கொண்ட விஜய், இரண்டாவது முறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் நேற்று டில்லி சென்றார்.
அங்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார். இன்று முற்பகல் 11 மணயளவில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார். சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணை நிறைவு பெற்றது. அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
முதல் நாள் விசாரணைக்கு வந்தது போலவே இன்றும் விஜய் கார் சிபிஐ அலுவலகத்தின் போர்டிகோ வரை சென்று நிறுத்தப்பட்டது. காரில் கண்ணாடி பொருத்தி மறைத்து இருந்ததால் பத்திரிகையாளர்கள் யாரும் படம்பிடிக்க முடியவில்லை.

