ADDED : நவ 12, 2024 07:39 PM

பெலகேரி இரும்புத்தாது கடத்தல் வழக்கில், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் இன்னும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. அதற்குள் இடைத்தேர்தலை எதிர்பார்த்து காங்கிரசார், 'துண்டு' போடுகின்றனர்.
பல்லாரி, சண்டூர் உட்பட பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ய முற்பட்ட, 8 லட்சம் டன் இரும்புத்தாதுவை வனத்துறை அதிகாரிகள், 2012ல் பறிமுதல் செய்தனர்.
இதை பல்லாரியின் பெலகேரி துறைமுகத்தில் வைத்திருந்தனர். இதை பாதுகாக்கும்படி துறைமுக ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
சி.பி.ஐ., விசாரணை
சில மாதங்களுக்கு பின், வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். 2 லட்சம் டன் இரும்புத்தாது காணாமல் போனது தெரிந்தது. இது தொடர்பாக, அன்றைய பா.ஜ., அரசு, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது.
விசாரணையில் கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல், பெலகேரியில் இருந்த இரும்புத்தாதுவை, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சி.பி.ஐ., அதிகாரிகளால் கைதான அவர் ஜாமினில் விடுதலை ஆனார். விசாரணை முடித்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில், அவரது குற்றம் உறுதியானதால், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 44 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி, 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
ஆனால் சதீஷ் சைல், இதுவரை தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. ஒருவேளை, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், கார்வார் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும்.
மேல் முறையீடு
மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய, சதீஷ் சைல் தயாராவதாக கூறப்படுகிறது.
ஒரு வேளை இடைத்தேர்தல் நடக்கும் பட்சத்தில், கார்வார் தொகுதியில் போட்டியிட காங்கிரசில் இப்போதே பலரும், 'துண்டு' போடுகின்றனர்.
கார்வார் சீட் எதிர்பார்க்கும் சிலர், தொகுதியில் அதிகம் தலைகாட்டத் துவங்கி உள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
மக்களின் கவனத்தை தங்கள் வசம் திருப்ப முயற்சிக்கின்றனர். தலைவர்களை சந்தித்து, தங்களுக்கு சீட் தரும்படி மன்றாடுகின்றனர்.
ம.ஜ.த.,வில் உள்ள ஆனந்த் அஸ்னோதிகர், காங்கிரசில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. காங்கிரசில் மட்டுமல்ல, பா.ஜ.,விலும் சீட்டுக்கு முயற்சி நடக்கிறது.
முன்னாள் எம்.எல்.ஏ., ரூபாலி நாயக், கட்சித் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். முந்தைய சட்டசபை தேர்தலில், மிகவும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றதால், இம்முறை தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்; தனக்கு சீட் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மற்றொரு பக்கம், ம.ஜ.த.,வின் ஆனந்த் அஸ்னோதிகர், கூட்டணி வேட்பாளராக தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என, காத்திருக்கிறார்.
- நமது நிருபர் -

