காஷ்மீர் சட்டசபை முதல் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்!
காஷ்மீர் சட்டசபை முதல் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்!
UPDATED : நவ 04, 2024 07:17 PM
ADDED : நவ 04, 2024 03:04 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை முதல் கூட்டத்தில் காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., கொண்டு வந்த தீர்மானத்தால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டத்தை மத்திய அரசு 2019 ம் ஆண்டு ரத்து செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காஷ்மீரில் ஆட்சி அமைத்ததும் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என முதல்வர் உமர் அப்துல்லா கூறியிருந்தார். தேர்தல் முடிந்து அவர் முதல்வராக பதவியேற்று உள்ளார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டம் இன்று துவங்கியது. 5 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் வஹீத் பாரா என்பவர், சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிராகவும், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனையடுத்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 28 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சட்டசபை விதிகளை மீறி தீர்மானத்தை கொண்டு வந்த வஹீத் பாராவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
உடனடியாக சபாநாயகர், அனைவரையும் இருக்கையில் அமர வேண்டும் எனக்கூறியதுடன், தீர்மானம் தனது கைக்கு வந்த உடன் பரிசீலனை செய்து முடிவு செய்வதாக கூறினார்.
இருப்பினும், இதனை ஏற்காமல் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கண்டனம் தெரிவித்தனர்.