ADDED : மே 27, 2025 03:48 PM

ஸ்ரீநகர்: உள்ளூர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் சுற்றுலா தலத்தில் காஷ்மீர் மாநில அமைச்சரவை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாதிகள் முகாம்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகளும் தாக்கப்பட்டன.
தாக்குதலில் நிலை குலைந்த பாகிஸ்தான், போர் நிறுத்தம் வேண்டும் என கெஞ்சியது. அதை இந்தியா ஏற்ற நிலையில் தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த பஹல்காம் பகுதி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், அங்கு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா ஏற்பாடு செய்தார்.
அதன்படி இன்று அவரும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும், பஹல்காமில் கூடிய சிறப்பு கூட்டத்தில் விவாதித்தனர்.
ஜம்மு காஷ்மீரில், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மூன்றாவது ஒரு இடத்தில் அமைச்சரவை கூட்டம் கூடியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.