ADDED : பிப் 08, 2024 12:40 AM
புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மதுபான கொள்கையில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., - அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
சட்ட விரோதமானது
இந்த வழக்கில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் உள்ளிட்டோர், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து இதுவரை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறையினர் ஐந்து சம்மன்களை அனுப்பினர். இவற்றை சட்ட விரோதமானது எனக் கூறி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணையை தவிர்த்து வருவதை எதிர்த்து, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், அமலாக்கத் துறையினர் கடந்த 3ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
நிரூபிப்போம்
இந்த மனுவை நேற்று விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா, வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பினார்.
இது குறித்து, ஆம் ஆத்மி நிர்வாகி ஜாஸ்மின் ஷா நேற்று கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்து, சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்போம். அமலாக்கத் துறையின் சம்மன்கள், சட்ட விரோதமானது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்,'' என்றார்.

