ரெண்டே நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர்: கேரள சட்டசபையில் பரபரப்பு
ரெண்டே நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர்: கேரள சட்டசபையில் பரபரப்பு
UPDATED : ஜன 25, 2024 01:17 PM
ADDED : ஜன 25, 2024 12:13 PM

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கூட்டத் தொடரில் இரண்டே நிமிடத்தில் கவர்னர் ஆரிப் முகமது கான் உரையை நிறைவு செய்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள அரசுக்கும் கேரள கவர்னராக உள்ள ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. கேரள மாநில அரசை பொதுவெளியில் ஆரிப் முகமது கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி கவர்னருக்கு எதிராக கேரளா அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இதற்கிடையே இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,25) துவங்கியது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் துவங்குவது வழக்கம். அதன்படி இன்று காலை கவர்னர் ஆரிப் முகமது கான், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை துவங்கினார். 62 பக்கம் கொண்ட கொள்கை உரையின் 136 பத்திகளில், நேரடியாக கடைசி பக்கத்தை திருப்பிய கவர்னர், ''இப்போது கடைசி பத்தியை படிக்கிறேன்'' எனக் கூறி அதை மட்டும் வாசித்துவிட்டு உரையை முடித்து அமர்ந்தார்.

