மாளிகைபுறத்தில் தேங்காய் உருட்ட கேரள உயர்நீதிமன்றம் தடை: தந்திரி வரவேற்பு
மாளிகைபுறத்தில் தேங்காய் உருட்ட கேரள உயர்நீதிமன்றம் தடை: தந்திரி வரவேற்பு
ADDED : நவ 29, 2024 04:27 AM

சபரிமலை: சபரிமலை மளிகைபுறத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இதை கண்டிப்பாக நிறைவேற்ற தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தந்திரி கண்டரரு ராஜீவரரு வரவேற்றுள்ளார்.
சபரிமலை மாளிகைபுறத்து அம்மன் கோயிலை சுற்றி தேங்காய் உருட்டுவதை வழிபாடாக பக்தர்கள் நடத்தி வருகின்றனர். அது போல மஞ்சள் பொடியை கோயிலை சுற்றி தூவுவதும், தேவிக்கு கொண்டுவரும் பிளவுஸ் துணிகளை கோயில் கோபுரத்தில் தூக்கி வீசுவதும், அதை எடுக்க முண்டியடிப்பதும் போன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபடுகின்றனர்.
தேங்காய் காலில் இடிபடுவதுடன் தேங்காயில் மிதித்து கீழே விழுந்து பக்தர்கள் காயமடைகின்றனர். இப்படி ஒரு ஐதீகம் சபரிமலையில் இல்லை என தந்திரியும், மேல் சாந்தியும் தொடர்ந்து எடுத்துக்கூறியும் பக்தர்கள் செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், எஸ் முரளி கிருஷ்ணா ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
மளிகைபுறத்து அம்மன் கோயிலை சுற்றி தேங்காய் உருட்டுவதையும், கோயிலை சுற்றி மஞ்சள் பொடி தூவுவதையும் அனுமதிக்க முடியாது. இது பிற பக்தர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட விஷயங்கள் சபரிமலையில் ஐதீகம் இல்லை என தந்திரி தெளிவுபடுத்தியுள்ளார்.
கோயில் கோபுரத்தின் மீது பிளவுஸ் துணிகளை வீசக்கூடாது. இதை தேவசம்போர்டு கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும். பக்தர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பை தொடர்ந்து ஒலிபெருக்கியில் வெளியிட வேண்டும்.
சபரிமலையில் 18ம் படி மற்றும் கோயில் சுற்றுப்புறங்களில் ஃப்ரீ லான்ஸர்கள் மற்றும் ஆன்லைன் சேனல் போட்டோகிராபர்கள், வீடியோ கிராபர்கள் ஒளிப்பதிவு செய்யக்கூடாது. தேவசம் போர்டின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே படம் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தேங்காய் உருட்டுவதற்கு தடை குறித்து தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதாவது: சபரிமலையில் இப்படி ஒரு ஐதீகம் இல்லை. யாரோ ஒருவர் தொடங்கி வைத்து இவ்வளவு பெரிதாகி மற்ற பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் நடந்து வருகிறது. மஞ்சள் பொடியை வீசுவதும், பிளவுஸ் துணிகளை தூக்கி எறிவதும் தவறான செயல்கள். இதை நீதிமன்றம் தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.