ADDED : டிச 04, 2024 09:54 PM

திருவனந்தபுரம்: சபரிமலையில் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்கப்படுவதாக கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும், நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மாலை அணிந்து, விரதம் இருந்து வருவார்கள். அதில், வயதானவர்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் பம்பையில் இருந்து மலையேறி சன்னிதானம் செல்வது கடினமான விஷயமாகும்.
எனவே, இவர்களுக்காகவே டோலி வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. 5 கி.மீ., மலைப்பாதையில் 4 பேர் சேர்ந்து டோலியில் ஒருவரை சுமந்து செல்ல குறிப்பிட்டத் தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது, 80 கிலோ வரை எடையுள்ளவருக்கு ரூ.4,000மும், 80 கிலோ முதல் 100 கிலோ வரை எடையுள்ளவருக்கு ரூ.5,000மும், 100 கிலோவுக்கும் அதிகமாக எடை உள்ளவர்களுக்கு ரூ.6,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டோலி ஊழியர்களுக்கான கட்டணத்தை செலுத்த ப்ரீபெய்டு முறையை கொண்டுவர திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. பம்பையில், 3 அல்லது 4 கவுன்டர்கள் தொடங்கப்பட்டு, டோலிக்கான கட்டணத்தை வசூல் செய்யவும், பின்னர், அந்தத் தொகையை டோலி ஊழியர்களுக்கு கொடுக்கவும் திட்டமிடப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு டோலி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ப்ரீபெய்டு திட்டம் குறித்து முறையாக எந்தத் தகவலும் கொடுக்கவில்லை என்றும், தங்களிடம் கலந்து ஆலோசிக்காமலே முடிவு செய்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பான வழக்கு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, வழிபாட்டு தலங்களில் போராட்டம் நடத்தவோ, வேலைநிறுத்தத்தில் ஈடுபடவோ அனுமதி கிடையாது என்று நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், எஸ் முரளி கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டோலி தொழிலாளர்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதனை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் டோலி சேவை இல்லாவிட்டால் எப்படி கோவிலுக்கு வருவார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தங்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை எழுத்துப்பூர்வமாக எழுதி சமர்ப்பிக்குமாறும், இனி இதுபோன்று நடக்காதபடி நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டுக்கும் உத்தரவிட்டனர்.