ரூ.3 கோடி மதிப்பு இ - சிகரெட் பதுக்கிய கேரள நபர் கைது
ரூ.3 கோடி மதிப்பு இ - சிகரெட் பதுக்கிய கேரள நபர் கைது
ADDED : ஜன 31, 2024 05:28 AM

பெங்களூரு : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 'இ - சிகரெட்'களை விற்பனை செய்து வந்த கேரளாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான 'இ - சிகரெட்'கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, நேற்று நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா அளித்த பேட்டி:
கேரளாவை சேர்ந்தவர் சோயப், 35. இவர், துபாயில் சில காலம் பணியாற்றிவிட்டு, பெங்களூரு சுத்தகுண்டே பாளையாவில் வசிக்கும் தனது சகோதரருடன் தங்கியிருக்கிறார்.
கூரியர் வழியே துபாயில் இருந்து புதுடில்லிக்கும், அங்கிருந்து பெங்களூருக்கும் 'இ - சிகரெட்' என்ற எலக்ட்ரானிக் சிகரெட்களை வரவழைத்து பதுக்கி வைத்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.
இது தொடர்பாக சி.சி.பி., என்ற மத்திய குற்றப்பிரிவின் போதைப்பொருள் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது 3 கோடி ரூபாய் மதிப்பிலான, 6,000 இ - சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கூறினார்.