பாக்., உளவாளியான யு டியூபருக்கு சிவப்பு கம்பளம் விரித்த கேரளா
பாக்., உளவாளியான யு டியூபருக்கு சிவப்பு கம்பளம் விரித்த கேரளா
ADDED : ஜூலை 08, 2025 12:23 AM

கொச்சி: கேரளாவில் சுற்றுலாவை விளம்பரப்படுத்த அம்மாநில அரசால் அழைக்கப்பட்ட சமூக ஊடக பிரபலங்களில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.
விசாரணை
பாகிஸ்தானுக்கு பல முறை சென்ற இவர், அங்கு வி.ஐ.பி., போல நடத்தப்பட்டதும், உளவு ஏஜென்ட்களை சந்தித்து நம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், பஹல்காம் தாக்குலுக்கு சில நாட்களுக்கு முன், அவர் பாக்., சென்றதும் தெரிய வந்தது.
இந்நிலையில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கும் கேரளாவில், சுற்றுலாவை விளம்பரப்படுத்த அழைக்கப்பட்ட சமூக ஊடக பிரபலங்களில், உளவு குற்றச்சாட்டில் கைதான ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆர்.டி.ஐ., எனப்படும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கேரள அரசு, 'மாநிலத்தில் சுற்றுலாவை விளம்பரப்படுத்த நாடு முழுதுமிருந்து 41 சமூக ஊடக பிரபலங்கள் அழைக்கப்பட்டனர்.
'அதில், ஹரியானாவின் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர். அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றுக்கான செலவுகளை மாநில அரசே ஏற்றுக் கொண்டது. அனைவரும் கேரளாவின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்' என தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலைக் கிளப்பியது. உளவாளிக்கு கேரளாவில் ராஜ மரியாதையா? என, சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், காங்., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
தொடர்பு
இது குறித்து, முதல்வர் பினராயி விஜயனின் மருமகனும், மாநில சுற்றுலா துறை அமைச்சருமான முகமது ரியாஸ் கூறுகையில், ''யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவை நாங்கள் அழைத்த போது, அவருக்கு பாகிஸ்தானுடன் உள்ள தொடர்பு குறித்து எங்களுக்கு தெரியாது.
''இப்போது தான் அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒருவர் உளவாளி என தெரிந்த பின், யாராவது அவரை அழைப்பரா?'' என, கேள்வி எழுப்பினார்.
கேரளாவில் பாரத மாதா படத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதே சமயம், உளவாளிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் பதவி விலக வேண்டும். இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும்.
-செஷாத் பூனாவாலா
தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,