சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்; கேரள அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்; கேரள அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
ADDED : செப் 30, 2025 12:39 AM
பாலக்காடு; மழை பொழிவு குறைந்ததால், மலைப்பாங்கான சுற்றுலா தலங்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்து கழகம் களம் இறங்கியுள்ளது.
கேரளாவில் சுற்றுலா பயணியருக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் பட்ஜெட் சுற்றுலா பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவு விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணியருக்காக சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
இந்நிலையில், போக்குவரத்து கழகத்தின் மாவட்ட பட்ஜெட் சுற்றுலா பிரிவு, அக்டோபர் மாதத்தில் தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க தயாராகி வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அக்டோபர் மாதத்தில் நெல்லியாம்பதி செல்ல, பாலக்காடு, மண்ணார்க்காடு மற்றும் சித்தூர் டிப்போகளிலிருந்து 20 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலக்கப்பாறை, கவி, மாமலைகண்டம் வழியாக மூணாறு, இல்லிக்கல் மேடு, - இலைவிழா பூஞ்சிறை-, மலங்கரை அணை, அமைதி பூங்கா ஆகிய பகுதிகளுக்கும் அக்., மாதம் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இல்லிக்கல் மேடு, - இலைவிழா பூஞ்சிறை-, மலங்கரை அணைக்கு தினமும் 9 'டிரிப்', மலக்கப்பாறை மற்றும் கவிக்கு தினமும், 8 'டிரிப்', மாமலைகண்டம் வழியாக மூணாறுக்கு தினமும், 6 'டிரிப்' மற்றும் அமைதி பூங்காவிற்கு நான்கு 'டிரிப்' பஸ் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நெல்லியாம்பதிக்கு மாவட்ட டிப்போவில் இருந்து 11 'டிரிப்' பஸ் இயக்கப்படுகிறது. அக். மாதம் 1 - 5, 11 - 12, 18 - 20, 26 ஆகிய தேதிகளில் பஸ் இயக்கப்படுகிறது. காலை ஏழு மணிக்கு டிப்போவில் இருந்து பஸ் புறப்படும். 5, 18 தேதிகளில் அமைதி பூங்கா, 4, 19, 26 தேதிகளில் மலக்கப்பாறை, 19, 25ம் தேதி ஆலப்புழா குட்டநாடு ஏரி என பஸ் இயக்கப்படுகிறது.
அக்., 18, 19 தேதிகளில் சொகுசு கப்பல் பயணம் உட்பட கொச்சி சுற்றுலாவும், 4, 14, 25 தேதிகளில் கவிக்கு சுற்றுலா, 11, 18 தேதிகளில் மாமலை கண்டம் வழி மூணாறுக்கு சுற்றுலா செல்லலாம்.
2, 11, 20 தேதிகளில் இல்லிக்கல் மேடு, - இலைவிழாபூஞ்சிறை-, மலங்கரை அணைக்கு பயணம் ஏற்பாடு செய்துள்ளது.
பயணங்களுக்கு 94478 37985, 83048 59018 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தார்.