கேரள இரட்டைக்கொலை: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
கேரள இரட்டைக்கொலை: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஜன 03, 2025 08:34 PM

கொச்சி: காசர்கோட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட 4 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மேலும் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சரத் லால், 23, கிருபேஷ், 19 ஆகியோர், 2019 லோக்சபா தேர்தல் காலத்தில் பெரியா பகுதியில் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு போலீசார், 14 பேரை கைது செய்தனர். ஆனால், கேரளா உயர்நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து கேரளா அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கில் மொத்தம் 24 பேர் மீது சி.பி.ஐ., குற்றம் சாட்டியது. வழக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை நீதிபதி சேஷாத்ரிநாதன் விசாரித்தார். முடிவில், 10 பேரை மட்டும் விடுவித்த அவர், 14 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. உத்மா தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குஞ்சிமாரன், கண்ணங்காடு வட்டார பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன், ராகவன் வேலுதொழி மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், மேலும் 10 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் அறிவிக்கப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து ரூ.21,40,000 அபராதம் வசூலிக்கவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.