ஈரானில் கமேனி ஆட்சிக்கு விரைவில் முடிவுரை: நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் உறுதி
ஈரானில் கமேனி ஆட்சிக்கு விரைவில் முடிவுரை: நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் உறுதி
UPDATED : ஜன 12, 2026 05:16 PM
ADDED : ஜன 12, 2026 07:21 AM

டெஹ்ரான்: 'லட்சக்கணக்கான மக்களை எதிர்கொள்ளும் அளவுக்கு ஈரான் பாதுகாப்புப் படையினர் நிலை இன்று இல்லை; எனவே, கமேனி ஆட்சி விரைவில் அகற்றப்படும்; அதுவரை சாலைகளை விட்டு வெளியேறாதீர்' என, அமெரிக்காவில் உள்ள ஈரான் பட்டத்து இளவரசர் அந்நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.
மேற்கு ஆசிய நாடான ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுதும் பெரும் போராட்டங்கள் தொடர்கின்றன. பொருளாதார சீர்குலைவு, பணமதிப்பு வீழ்ச்சி, சர்வதேச தடைகள் ஆகிய காரணங்களுக்காக துவங்கிய போராட்டம், தற்போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்து உள்ளது.
538 பேர் பலி
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறி வருகின்றனர். இதுவரை அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 538 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையம், தொலைபேசி இணைப்புகள் முழுதுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெஹ்ரான் மற்றும் மஷ்ஹத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. 'கமேனி ஆட்சி ஒழிக' என்ற முழக்கங்கள் ஈரான் முழுதும் எதிரொலிக்கின்றன.
ஈரானுக்கு வெளியேயும் கமேனி ஆட்சிக்கு எதிராக வெளிநாடு வாழ் ஈரானியர்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஈரான் துாதரகம் உள்ளது. இங்கு வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், துாதரகத்தின் பால்கனியில் ஏறி, ஈரானின் அதிகாரப்பூர்வ கொடியை பிடுங்கி கீழே வீசிவிட்டு, 1979க்கு முந்தைய 'சிங்கம்- - சூரியன்' கொடியை நேற்று முன்தினம் ஏற்றினார்.
நாடு திரும்புவேன்
அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரான் முன்னாள் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி நேற்று வெளியிட்ட வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: தெருக்களில் இறங்கி மூன்று நாட்களாக இரவும் பகலும் துணிச்சலுடன் ஈரான் மக்களாகிய நீங்கள் போராடுகிறீர்கள். இதனால், கமேனியின் ஆட்சியும் அவரது அடக்குமுறை இயந்திரமும் பெரிதும் பலவீனமடைந்துள்ளன.
பாதுகாப்பு படையினர் பலர் உயிருக்கு அஞ்சி பணியை விட்டு விலகியுள்ளனர். கமேனியிடம் எஞ்சியிருப்பது சில கூலிப்படையினர் மட்டுமே. இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். போராட்டத்தை கைவிடாதீர்கள். நான் விரைவில் நாடு திரும்புவேன். இவ்வாறு கூறியுள்ளார்.

