ADDED : டிச 31, 2024 09:07 PM

புதுடில்லி: மாநிலங்களில் ஆளும் பாஜ., அரசுகள், சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு எதிரான மனநிலையை கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக,கார்கே எக்ஸ்தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது:
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான மனநிலை இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களில் - மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் ஒரு தலித் இளைஞன் போலீஸ் காவலில் கொல்லப்பட்டார். ஒடிசாவின் பாலசோரில் பழங்குடிப் பெண்கள் மரங்களில் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டனர்.
ஹரியானா மாநிலம் பிவானியில் தலித் மாணவி ஒருவர் பிஏ தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் பழங்குடியின கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஐசியூவைத் தேடி 100 கி.மீ தூரம் பயணித்து உயிரிழந்தார். உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர்நகரில், மூன்று தலித் குடும்பங்கள் ஜாதி அடிப்படையிலான தாக்குதல்களால் புலம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காவல்துறை அமைதியாக இருக்கிறது.
இவ்வாறு கார்கே பதிவிட்டுள்ளார்.