ADDED : நவ 09, 2024 03:31 AM

மல்லேஸ்வரம்: மல்லேஸ்வரத்தில் கடத்தப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை மீட்கப்பட்டது.
பெங்களூரு மல்லேஸ்வரம் பைப்லைன் பகுதியைச் சேர்ந்தவர்கள் திவ்யபாரதி - லோகேஷ் தம்பதி. இவர்களின் இரண்டரை வயது பெண் குழந்தை நவ்யா.
வழக்கம் போல், நேற்று முன்தினம் காலையில், குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தம்பதி தயாராகிக் கொண்டிருந்தனர்.
வீட்டின் வெளிப்பகுதியில், குழந்தை நின்று கொண்டிருந்தது. திடீரென குழந்தையை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். அவர்களுக்கும் தெரியவில்லை. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தனர். ஒரு பெண், குழந்தையை அழைத்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
உடனடியாக வயாலி காவல் போலீசில், பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் விசாரித்தனர். அப்பெண், தேவய்யா பார்க் அருகில் இருப்பதாக, போலீசாருக்கு தெரிய வந்தது.
அங்கு சென்ற அவர்கள், அப்பெண்ணையும், குழந்தையையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்களிடம், குழந்தையை ஒப்படைத்தனர்.
குழந்தையை கடத்திய பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று காணப்படுவதாகவும், அவரிடம் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஒரு பெண், குழந்தையை அழைத்துச் செல்லும் 'சிசிடிவி' காட்சி.