அண்ணனை ஏமாற்ற கடத்தல் நாடகம்; எழுத்துப்பிழையால் பிடிபட்ட தம்பி
அண்ணனை ஏமாற்ற கடத்தல் நாடகம்; எழுத்துப்பிழையால் பிடிபட்ட தம்பி
ADDED : ஜன 09, 2025 02:28 AM

ஹர்தோய் : உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பண்டாரஹா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், சஞ்சய் குமார். ஒப்பந்ததாரரான இவருக்கு, சந்தீப், 27, என்ற தம்பி உள்ளார்.
சமீபத்தில், சஞ்சய் குமாருக்கு வந்த கடிதத்தில், 'உங்கள் தம்பி சந்தீப்பை கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க, 50,000 ரூபாய் தர வேண்டும். இல்லை எனில், அவரை கொலை செய்து விடுவோம்' என, மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
மேலும், சஞ்சய் குமாரின் மொபைல் போனுக்கு ஒரு வீடியோவும் வந்தது. அதில், நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தீப் இருந்தார். இதுகுறித்து, போலீசில் சஞ்சய் குமார் புகார் அளித்தார்.
அவருக்கு யாருடனும் முன்விரோதம் இல்லாததையும், மிரட்டிக் கேட்ட பணமும் குறைவாக இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
மேலும், சஞ்சய் குமாருக்கு வந்த கடிதத்தில், கொலை என்ற ஆங்கில வார்த்தையில் எழுத்துப்பிழை இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
சந்தீப்பின் மொபைல் போன் எண் இருப்பிடத்தை 'டிராக்' செய்த போலீசார், ருபாபூர் என்ற இடத்தில், அவரை மீட்டனர். அவரிடம் கடத்தல் சம்பவம் குறித்து எழுதி தரும்படி போலீசார் கேட்டனர்.
அப்போது, சஞ்சய் குமாருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், கொலை என்ற வார்த்தையில் எழுத்துப்பிழை இருந்தது போலவே, சந்தீப் எழுதிய குறிப்பிலும் எழுத்துப்பிழை இருந்தது.
விசாரித்ததில், அண்ணனை ஏமாற்றி கடத்தல் நாடகமாடியதை சந்தீப் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மிர்சாபூரில் உள்ள கரும்பு கொள்முதல் மையத்தில் பணிபுரியும் சந்தீப், டிச., 30ல், சஹாபாத் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தில் முதியவர் மீது மோதினார். இதில் முதியவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு இழப்பீடு தர பணம் தேவைப்பட்டதால், சந்தீப் கடத்தல் நாடகமாடியதாகக் கூறப்படுகிறது.

