தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் சிறுநீரக மாற்று சிகிச்சை மோசடி
தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் சிறுநீரக மாற்று சிகிச்சை மோசடி
ADDED : ஜன 26, 2025 03:02 AM
ஹைதராபாத்: ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்ட விரோதமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மோசடி தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தாசை காட்டி தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆந்திராவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியில்லாமல், சட்ட விரோதமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்தன.
இதன்படி, சுகாதாரத் துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து அங்கு அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு மிகப்பெரிய மோசடி நடந்து வந்தது தெரியவந்துள்ளது.
9 பேர் கைது
இதுகுறித்து போலீசார் கூறியுள்ளதாவது:
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்ட விரோதமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக கிடைத்த தகவலின்படி இந்த சோதனை நடந்தது.
இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான சுமந்த் உட்பட இரண்டு டாக்டர்கள், ஐந்து மருத்துவ உதவியாளர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை செய்ய சென்றபோது, அங்கு சிறுநீரக தானம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் அவற்றை தானமாக பெற்ற இரண்டு பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தமிழகம் மற்றும் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, தலா ஒரு அறுவை சிகிச்சை நிபுணர்கள், இந்த மோசடியில் தொடர்புடைய மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர்.
விசாரணை நடத்தியதில், சீனாவில் எம்.பி.பி.எஸ்., படித்த அவினாஷ் என்பவர், தன் பெற்றோருடன் சேர்ந்து, 2022ல் தனியார் மருத்துவமனையை நடத்தி வந்து தெரியவந்தது.
நிதி நெருக்கடியால் அவரால் மருத்துவம னையை நடத்த முடி யவில்லை. இந்நிலையில், அவரை தொடர்பு கொண்ட சில புரோக்கர்கள், அங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அவரை ஒப்புக்கொள்ள வைத்தனர்.
சொர்ப்ப தொகை
அந்த புரோக்கர்களே, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ உதவியாளர்கள், சிறுநீரகம் தானமளிப்பவர், அதை தானமாக பெற்றவர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தவர்களிடம் இருந்து, 60 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். ஆனால், தானமாக வழங்கியோருக்கு சொற்பத் தொகையையே கொடுத்துஉள்ளனர்.
சில நிர்வாகக் காரணங்களால் அந்த மருத்துவமனையை டாக்டர் அவினாஷ் மூட வேண்டியதாயிற்று. அதைத் தொடர்ந்து, டாக்டர் சுமந்த் உள்ளிட்டோர் இந்த மோசடியைத் தொடர்ந்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக, தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

