கிசான்கர் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் விடுவிப்பு
கிசான்கர் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் விடுவிப்பு
ADDED : ஆக 31, 2025 09:29 PM
புதுடில்லி:கடந்த, 2021ல் நடந்த கிசான்கர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட முக்கிய குற்றவாளியை, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்ட டில்லி கோர்ட், அந்த வழக்கில் தொடர்புடைய மேலும், நான்கு பேர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் கொலை முயற்சி வழக்கில் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
கடந்த 2021ல் கிசான்கருக்கு காரில் வந்தவர்கள் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர். கார் டிரைவர் காயம் அடைந்தார். காரில் இருந்த சோம்ராஜ் என்ற தாமி மற்றும் கிருஷ்ணா உயிர் தப்பினர்.
இந்த கொலை முயற்சி தொடர்பாக, ஹரீந்தர் மான் மற்றும் பிம்லேஷ் மான் ஆகிய சகோதரர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தாமிக்கும், மான் சகோதரர்களுக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ரிதம் அகர்வால் மற்றும் நீரஜ் திவாரி ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள் தங்கள் வாதத்தில், 'சந்தேகத்தின் அடிப்படையில் தான் மான் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இந்த கொலை முயற்சி வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, ஒரு சிறிய ஆதாரத்தை கூட எதிர்தரப்பால் காட்ட முடியவில்லை' என்றனர்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிரண் குப்தா, மான் சகோதரர்களை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.