ஓராண்டுக்கு பணிகளை செய்யாதீர்கள் கான்ட்ராக்டருக்கு குமாரசாமி அறிவுரை
ஓராண்டுக்கு பணிகளை செய்யாதீர்கள் கான்ட்ராக்டருக்கு குமாரசாமி அறிவுரை
ADDED : ஜன 16, 2025 06:32 AM

பெங்களூரு: ''மாநிலத்தில் ஒப்பந்ததாரர்கள், ஓராண்டு வரை எந்த பணிகளையும் மேற்கொள்ளாதீர்கள். யாரும் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் இரண்டு முறை, முதல்வராக இருந்த போது யாருக்கும் தொந்தரவு கொடுத்தது இல்லை. மாநிலத்தை காப்பாற்ற வேண்டுமானால், ஒப்பந்ததாரர்கள், ஓராண்டுக்கு எந்த பணிகளையும் நடத்தாதீர்கள். யாரை வைத்து பணிகளை நடத்துகின்றனர் என, பார்க்கலாம். ஆந்திராவினரை அழைத்து வந்து, பணிகளை நடத்தட்டும்.
இதற்கு முன் எப்போதும், இத்தகைய மோசமான ஆட்சி நடந்தது இல்லை. ஒப்பந்ததாரர்களுக்கு இடையே, பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். உங்களை பயன்படுத்துகின்றனர்; பிரச்னைகள் சரியாக வேண்டும் என்றால், ஒப்பந்தம் பெறாதீர்கள்.
ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். அமைதியான முறையில் போராட்டம் நடத்துங்கள். தவறு உங்களுடையது அல்ல. அரசுடையது. நீங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. நேர்மையான முறையில் பணியை முடித்து, அதற்கான பணத்தை கேட்கிறீர்கள். நியாயமான முறையில் பணத்தை கேளுங்கள். தற்கொலை செய்ய அனுமதி கேட்காதீர்கள்.
பல ஒப்பந்ததாரர்கள், தங்கள் குடும்பத்து பெண்களின் தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து, பணிகளை நடத்தியுள்ளனர். பணிகளை நடத்தாமல் பில் தொகை கேட்டால், அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பணிகளை முடித்துவிட்டு பில் தொகை கேட்பது தவறு அல்ல. இவர்களுக்கு பில் தொகை வழங்காவிட்டால், இவர்கள் குடும்பத்தின் நிலை என்னவாகும்.
குமாரசாமி ஹரிச்சந்திரன் அல்ல என, அமைச்சர்கள் விமர்சிக்கின்றனர். நான் ஹரிச்சந்திரன் என, எங்கேயும் கூறி கொண்டது இல்லை.
இரண்டு முறை முதல்வராக இருந்த போது, அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.