போலீஸ் கவுரவம் சீர்குலைப்பு: குமாரசாமி குற்றச்சாட்டு
போலீஸ் கவுரவம் சீர்குலைப்பு: குமாரசாமி குற்றச்சாட்டு
ADDED : டிச 24, 2024 06:27 AM
ஹாசன்: ''கர்நாடக போலீஸ் துறை, நாட்டிலேயே சிறப்பாக செயல்படும் துறை என்ற கவுரவம் உள்ளது. அந்த கவுரவத்தை பாழாக்கும் வேலையை செய்துள்ளனர்,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக போலீஸ் துறைக்கு, நாட்டிலேயே சிறந்த கவுரவம் உள்ளது. அதை பாழாக்குகின்றனர். முழுமையாக போலீஸ் துறை மீது, நான் குறை கூறவில்லை. ஆனால் அரசின் அமைச்சர்கள், குறிப்பிட்ட சில போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் மூலம், சட்டவிரோதமாக நடந்து கொள்கின்றனர்.
தங்களுக்கு தேவையானபடி, வழக்குகளை பதிவு செய்கின்றனர். தங்கள் எதிரிகளை ஒடுக்க, அமைச்சர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். அரசே சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொள்கிறது. இதற்கு காலமே பதில் சொல்லும்.
மாநிலத்தில் இந்த அரசு வந்த பின், என்னென்ன நடக்கிறது என்பதை, நானும் கவனித்தேன். ஹாசன் மாவட்டத்துக்கு, தேவகவுடாவின் பங்களிப்பு என்ன என, துணை முதல்வர் சிவகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த மாவட்டத்துக்கு, காங்கிரஸ் தலைவர்களின் பங்களிப்பு என்ன? சிடி வெளியிட்டனரே, அதுதான் அவர்கள் ஹாசனுக்காக அளித்த பங்களிப்பு. இது தவிர வேறு என்ன செய்தனர்?
ஹாசன் வளர்ச்சி அடைந்தது என்றால், அதற்கு காரணம் தேவகவுடாவும், ரேவண்ணாவும் தான். நான் முதல்வராக இருந்தபோது, திட்டங்களை கொடுத்தேன். காங்கிரசார் என்ன கொடுத்தனர்? ஹாசனின் மேம்பால பணிகளை இன்னும் முடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.