குமாரசாமி தான் திருடன்! காங்., - எம்.எல்.ஏ., சாடல்
குமாரசாமி தான் திருடன்! காங்., - எம்.எல்.ஏ., சாடல்
ADDED : மார் 14, 2024 04:23 AM

ராம்நகர் : “முன்னாள் முதல்வர் குமாரசாமி தான் திருடன்,” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் சாடி உள்ளார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதிகள் பற்றி, வீடு, வீடாக சென்று, மக்களிடம் தொண்டர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ராம்நகர் தொகுதி மக்கள், ஜாதி அரசியலை விரும்புவது இல்லை. அன்பு, நீதி அடிப்படையில் நடக்கும், அரசியலை விரும்புகின்றனர்.
சிவகுமார், சுரேஷை திருடன் என்று குமாரசாமி கூறி உள்ளார். காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியின்போது, குமாரசாமியின் கையை உயர்த்தி சிவகுமார், முதல்வர் ஆக்கினார். அப்போது ஏன் திருடன் என்று கூறவில்லை?
ராம்நகரில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த நான் எம்.எல்.ஏ.,வாக இருப்பதை, குமாரசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னை வெற்றி பெற வைத்ததற்காக, சிவகுமாரை, திருடன் என குமாரசாமி விமர்சித்து வருகிறார்.
சிவகுமார் திருடன் இல்லை; குமாரசாமி தான் திருடன். திருட்டுப் பட்டத்தை அவர் ஏற்றுக் கொள்ளட்டும். பா.ஜ.,வுடன் சேர்ந்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக, குமாரசாமி மாறிவிட்டார். ம.ஜ.த., கட்சியின் சால்வை அணிவதை மறந்துவிட்டு, காவி சால்வை அணிகிறார்.
டாக்டர் மஞ்சுநாத் நல்ல மனிதர். சிறந்த டாக்டர். அரசியல் பற்றி எதுவும் தெரியாத அப்பாவி. பெங்களூரு ரூரலில் களம் இறக்கி, அவர் சம்பாதித்த பெயரை கெடுக்க பார்க்கின்றனர்.
பெங்களூரு ரூரலில் போட்டியிட குமாரசாமி, யோகேஸ்வர், அஸ்வத் நாராயணாவுக்கு தைரியம் இல்லையா? ராம்நகர் பொறுப்பு அமைச்சராக இருந்தபோது, ராமர் கோவில் கட்டுவேன் என்று கூறிய அஸ்வத் நாராயணா, இப்போது எங்கு சென்றார்?
இவ்வாறு அவர் கூறினார்.

