ஜனாதிபதியை ஒருமையில் பேசிய சித்தராமையா முதல்வர் பதவியிலிருந்து நீக்க குமாரசாமி கோரிக்கை
ஜனாதிபதியை ஒருமையில் பேசிய சித்தராமையா முதல்வர் பதவியிலிருந்து நீக்க குமாரசாமி கோரிக்கை
ADDED : ஜன 29, 2024 07:32 AM

சித்ரதுர்கா: ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ஒருமையில் பேசிய சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்து உள்ளார்.
சித்ரதுர்காவில் நேற்று நடந்த மாநாட்டில், முதல்வர் சித்தராமையா பேசுகையில், 'பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவள் என்பதால், ஜனாதிபதி திரவுபதி முர்முவை, புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு, ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை' என கூறி இருந்தார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
நமது நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதல்வர் சித்தராமையா ஒருமையில் பேசி உள்ளார். இந்த ஜனநாயகவாதியின் உண்மை முகம் தெரிந்து விட்டது.
சித்தராமையா முதல்வர் பதவியில் இருக்க தகுதியற்றவர். அவரை உடனடியாக பதவியில் இருந்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நீக்க வேண்டும். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த, நாட்டின் முதல் ஜனாதிபதியை, தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அவமதித்து உள்ளார்.
வக்கீல், அரசியல் சாசன நிபுணர் என்று தன்னை தானே சொல்லி கொள்ளும் சித்தராமையா, ஜனாதிபதியை ஒருமையில் பேசியதற்கு வெட்கப்பட வேண்டும். அவரது பேச்சு நாட்டையும், அரசியலமைப்பையும் அவமதிக்கும் செயலாகும்.
முதல்வர் மகன் யதீந்திராவை பார்த்து, ஒருமையில் பேசியவரை போலீசார் அடித்து இழுத்து சென்று, கைது செய்தனர். அப்படி என்றால் ஜனாதிபதியை ஒருமையில் பேசிய சித்தராமையாவுக்கு என்ன தண்டனை. பெண்கள் மீது மரியாதை இருந்தால், சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.