வேலைக்கு நிலம் மோசடி வழக்கு லாலுவிடம் துருவி துருவி விசாரணை
வேலைக்கு நிலம் மோசடி வழக்கு லாலுவிடம் துருவி துருவி விசாரணை
ADDED : ஜன 29, 2024 11:18 PM

பாட்னா: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு பிரதிபலனாக நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், ரயில்வே அமைச்சராக இருந்தார்.
அப்போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு பிரதிபலனாக பலரிடம், நிலங்களை குறைந்த விலையில் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு உள்ளது.
இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவை நேற்றும், அவருடைய மகனும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை இன்றும் ஆஜராக, அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பியிருந்தது.
இதன்படி, பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், லாலு பிரசாத் யாதவ் நேற்று காலை ஆஜரானார்.
அவருடைய மகளும், ராஜ்யசபா எம்.பி.,யுமான மிசா பாரதியும், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
உடல்நிலை மோசமாக உள்ள நிலையிலும், விசாரணையின்போது அவருடன் இருக்க மிசா பாரதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, லாலு பிரசாத் யாதவின் மற்றொரு மகள் ரோஹிணி ஆச்சார்யா, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், திட்டமிட்டபடி, லாலு பிரசாத் யாதவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
அப்போது, லாலுவிடம் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, லாலு வீட்டில் வேலை பார்த்த ஒருவர், ரயில்வே வேலை பெற்று தருவதற்காக சிலரிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கியுள்ளதும், பின் அந்நிலத்தை லாலு குடும்பத்திற்கு மாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.