பீஹாரில் லாலுவின் ஆர்ஜேடி கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது: மோடி
பீஹாரில் லாலுவின் ஆர்ஜேடி கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது: மோடி
ADDED : செப் 26, 2025 01:21 PM

புதுடில்லி: ''ராஷ்டிரிய ஜனதா தளம் ஆர்ஜேடி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒருபோதும் ஆட்சிக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
பீஹாரில் பெண்கள் 75 லட்சம் பேருக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை டில்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பீஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது நிலவிய பயங்கரவாதத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது எந்த மக்களும் பாதுகாப்பாக இல்லை.
நக்சலைட் வன்முறையின் பயங்கரவாதம் பரவலாக இருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பெண்களுக்கு சுமையாக இருந்தது. ஏழைகள் முதல் டாக்டர்கள் வரை யாரும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்களின் அட்டூழியங்களிலிருந்து யாரும் தப்பவில்லை. சாலைகள் இல்லை, சட்டம் ஒழுங்கு பரிதாபமாக இருந்தது. இன்று, நிதிஷ் குமாரின் தலைமையில் சட்டத்தின் ஆட்சி திரும்பியபோது, பெண்கள் மிகப் பெரிய நிம்மதியை உணர்ந்துள்ளனர்.
பீஹாரில் பெண்கள் பயமின்றி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். நிதிஷ் குமாரின் அரசாங்கத்திற்கு முன்பு இது வெறுமனே சாத்தியமில்லை. நான் பீஹாருக்குச் செல்லும் போதெல்லாம், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பெண் போலீசாராக பணி அமர்த்தப்பட்டு இருப்பதை கண்டு நான் மிகவும் திருப்தி அடைகிறேன்.
ஆர்ஜேடி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒருபோதும் ஆட்சிக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீஹாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்கள் அதிகாரம் அளிப்பதற்காக பாடுபடுகிறது. உஜ்வாலா யோஜனா, பீஹாரில் 8.5 கோடி மக்கள் இலவச ரேஷன் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களால் வாழ்க்கை பெரிதும் மேம்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
தேர்தலால் முக்கியத்துவம்
பீஹாரில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரம் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் பெண்கள் வாக்காளர்களில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.