ADDED : ஜன 20, 2025 07:06 AM

மைசூரு: ''மைசூரு விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும்,'' என, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மைசூரு மாவட்ட மேம்பாட்டு கூட்டத்தில், விமான நிலைய மேம்பாடு குறித்து முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி ஒரு வாரத்தில் முடிந்துவிடும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
மைசூரு - பெங்களூரு விரைவு சாலையை மேம்படுத்த, 711 கோடி ரூபாய் தயாராக உள்ளது. மூன்று மாதத்தில் இப்பணி துவங்கும். இவ்வழித்தடத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம், சுங்கவரியாக அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பிரச்னைக்கும் விரைவில் தீர்வு ஏற்படும்.
மைசூரில் அர்ஜுன் யானை நினைவாக, 'அர்ஜுனா சதுக்கம்' கட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியை, மாநில அரசும், மைசூரு மாநகராட்சியும் செய்து முடித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.