காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு இலவச நிலம் ஒதுக்கப்பட்டதா: சட்டசபையில் கேள்வி
காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு இலவச நிலம் ஒதுக்கப்பட்டதா: சட்டசபையில் கேள்வி
ADDED : மார் 09, 2025 07:04 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், தொழிற்சாலை அமைக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவர் செவ்லான் குளிர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ரூ. 1,500 கோடியில் அலுமினியம் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போடப்பட்டு உள்ளது. தற்போது, இந்த விவகாரம் வெளியாகி சட்டசபையில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
சட்டசபையில் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தாரிகாமி ,' இது முக்கியமான விஷயம். இது குறித்து விசாரிக்க வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜிஏ மிர் கூறுகையில், இந்தியர் அல்லாதவருக்கு இலவசமாக பணம் கொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜாவேத் அஹமது தர், இது வருவாய்த்துறை தொடர்பானது. எங்களிடம் எந்த தகவலும் இல்லை. உண்மையை அறிய விசாரணை நடத்துவோம் என்றார்.