ADDED : நவ 13, 2024 03:43 AM

ஆக்ரா; உத்தர பிரதேசத்தில் பள்ளத்தில் மண் சரிந்து விழுந்து, 10 வயது சிறுமி உட்பட நான்கு பேர் பலியாகினர்; ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
உத்தர பிரதேசத்தின் ராம்பூர் - கதாவூர் கிராமத்திற்கு இடையே பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக, அருகில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, அதன் வாயிலாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், அதன் அருகே உள்ள வீட்டில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள், அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த மணலை எடுப்பதற்காக கும்பலாக சென்றனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில் ஒன்பது பேர் அதில் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மண்ணில் புதைந்த நபர்களை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்ததில், 10 வயது சிறுமி உட்பட நான்கு பேர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
படுகாயமடைந்த மற்ற ஐந்து பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

