வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 வரை கடைசி வாய்ப்பு
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 வரை கடைசி வாய்ப்பு
ADDED : டிச 21, 2024 12:51 AM

புதுடில்லி: ஐ.டி.ஆர்., எனப்படும், வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது அதில் ஏதேனும் தவறு செய்தவர்கள் கணக்கை தாக்கல் செய்யவும், தவறுகளை சரி செய்யவும் வரும் 31ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது.
நிதியாண்டு 2023 - 24க்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய, 2024, ஜூலை 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த காலக்கெடுவிற்குள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய தவறியோர், தாமதமான வருமான வரி தாக்கலை செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுஉள்ளது.
இருப்பினும், தாமதமாக கணக்கு தாக்கல் செய்வதற்கு, பிரிவு 234எப்-இன் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
அதன்படி, 5,000 ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படும். இருப்பினும், நபரின் மொத்த வருமானம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், தாமதமான தாக்கலுக்கான கட்டணமாக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்த காலக்கெடுவை தவறவிடுபவர்கள் சிக்கலில் மாட்ட வாய்ப்புள்ளதுடன், அபராதத் தொகையும் அதிகரிக்கும்.
வரும் 31ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பையும் தவறவிட்டால், அபராதத் தொகை 10,000 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், சட்ட நடவடிக்கை மற்றும் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.