பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்; ஐரோப்பிய தலைவர்களை விளாசிய நெதர்லாந்து நிறுவனம்
பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்; ஐரோப்பிய தலைவர்களை விளாசிய நெதர்லாந்து நிறுவனம்
UPDATED : அக் 03, 2025 06:51 PM
ADDED : அக் 03, 2025 06:40 PM

புதுடில்லி: வணிக நிறுவனங்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பதை பிரதமர் மோடியிடம் இருந்து ஐரோப்பிய தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரபல செமிகண்டக்டர் நிறுவனமான ஏஎஸ்எம்எல் (ASML) நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏஎஸ்எம்எல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோப் பவுகெட், சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஏஎஸ்எம்எல் நிறுவனத்தின் செயல் அதிகாரி பிராங்க் ஹீம்ஸ்கெர்க், பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, பிரதமர் மோடியை பாராட்டி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது; பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, நாங்கள் சொல்வதை மட்டுமே அவர் கேட்டிருக்கவில்லை. 'நீங்கள் மிகவும் நட்பாக பழகுகிறீர்கள். நாம் எப்படி இணைந்து மேம்படுவது என்பதை பற்றி சொல்லுங்கள்,' என்று பிரதமர் மோடி எங்களிடம் கேட்டார்.
வர்த்தக நிறுவனங்களுடனான அணுகுமுறையை பிரதமர் மோடியிடம் இருந்து ஐரோப்பிய தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2021ம் ஆண்டு ரூ.76,000 கோடி நிதியுடன் இந்திய செமிகண்டக்டர் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, இஸ்ரோவின் செமிகண்டக்டர் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட விக்ரம் என்ற முதல் இந்திய சிப், கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்கள், இந்தாண்டு இறுதிக்குள் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், உலகளவில் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனம் பிரதமர் மோடியை பாராட்டியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.