பெங்களூரு அரண்மனையை குறிவைக்கும் கர்நாடக அரசை எதிர்த்து சட்டப்போராட்டம்
பெங்களூரு அரண்மனையை குறிவைக்கும் கர்நாடக அரசை எதிர்த்து சட்டப்போராட்டம்
ADDED : ஜன 26, 2025 02:56 AM

மைசூரு: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, பெங்களூரு அரண்மனைக்குச் சொந்தமான பல நுாறு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும், இதற்காக இழப்பீடு வழங்கவும் 1996ல் மாநில அரசு முடிவு செய்தது.
இந்த இழப்பீட்டுத் தொகை குறைவாக இருந்ததால், இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். இங்கு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரச குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர்.
விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கையகப்படுத்தும் அரண்மனை நிலத்துக்கு 3,011.66 கோடி ரூபாய் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. வெறும் 2 கி.மீ., சாலைக்காக நிலத்துக்கு மட்டும் 3,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதா என அரசு தயக்கம் காட்டுகிறது.
இதற்கிடையே பெங்களூரில் வாகன போக்குவரத்து நெருக்கடி, நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சாலையை அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரண்மனை நிலத்தை கையகப்படுத்த, அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சர்ச்சைக்கு காரணமானது.
அரச குடும்பத்தினருக்கும், மாநில அரசுக்கும் இடையே 'பனிப்போரு'க்கு வழி வகுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, ராணி பிரமோதா தேவி, மைசூரில் நேற்று அளித்த பேட்டி:
ஆரம்பத்தில் இருந்தே அரண்மனையை குறி வைக்கின்றனர். எங்களுக்கு அநியாயம் நடந்தால், சட்டப்போராட்டம் நடத்தத் தயாராக இருக்கிறோம்.
இப்போதும் பெங்களூரு அரண்மனை இடத்துக்கு, நாங்களே உரிமையாளர்கள். ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மற்றும் அவரது அக்கா, தங்கைகளும் கூட, உரிமையாளர்கள் பட்டியலில் உள்ளனர். இன்னும் பலரின் பெயர் உள்ளது.
அரண்மனை பகுதியில் ஏற்கனவே சாலைக்கு பயன்படுத்தப்பட்ட இடமும் எங்களுடையதே. சாலைக்கு 15.36 ஏக்கர் இடத்தை பயன்படுத்திஉள்ளனர். டி.டி.ஆர்., எனும் டிரான்ஸ்பெரபல் டெவலப்மென்ட் ரைட்ஸ் கொடுக்கக் கூடாது என்பதால், அவசர சட்டம் கொண்டுவர முன்வந்துஉள்ளனர்.
டி.டி.ஆர்., கொடுப்பதாக நீதிமன்றத்தில் கூறினர். ஆனால் இப்போது 3,000 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது என்பதால், வேறு விதமாக நடந்து கொள்கின்றனர். இதைக் கண்டித்து நாங்கள் சட்டப்போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு கூறினார்.

