பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவோம்!: தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா சூளுரை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவோம்!: தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா சூளுரை
ADDED : மே 16, 2024 12:27 AM

செரம்பூர்: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், நம் நாட்டின் ஒரு பகுதி; நமக்கு சொந்தமான அதை விரைவில் கைப்பற்றுவோம்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.
நாடு விடுதலை அடைந்தபோது, ஜம்மு - காஷ்மீரில் உள்ள காஷ்மீர் பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சித்தது.
பல பகுதிகளை அந்நாடு கைப்பற்றிய நிலையில், நம் ராணுவ வீரர்களின் அதிரடி முயற்சியால், பாகிஸ்தான் வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இருப்பினும், அந்நாட்டு வீரர்களால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரின் சில பகுதிகளை இன்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது.
கிளர்ச்சி
அவற்றை தான் நாம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கடந்த 75 ஆண்டுகளாக அழைத்து வருகிறோம். இந்த இடங்களை கைப்பற்றுவது தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது.
அந்த பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய அரசு பார்லிமென்டில் அறிவித்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட வரைபடத்திலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகள் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை தரக்கூடிய 370வது சட்டப்பிரிவை, 2019ல் பா.ஜ., அரசு ரத்து செய்தது.
இந்நிலையில், 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விரைவில் கைப்பற்றுவோம்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தல் நடக்கும் செரம்பூரில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
கடந்த 2019ல், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து, ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திரத்துக்கான முழக்கம் இங்கு எழுந்தது போல், தற்போது பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்கின்றன.
மக்கள் முடிவு
அந்த பகுதிகளை மீட்க காங்கிரஸ் இதுவரை குரல் கொடுத்தது இல்லை. மாறாக, பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என அக்கட்சியின் மணிசங்கர் அய்யர் மிரட்டுகிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், நம் நாட்டின் ஒரு பகுதி. நமக்கு சொந்தமான அது விரைவில் கைப்பற்றப்படும்.
தற்போது நடந்து வரும் லோக்சபா தேர்தலில், ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த 'இண்டியா' கூட்டணி தலைவர்களை தேர்ந்தெடுப்பதா அல்லது நேர்மையான அரசியல்வாதி நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பதா என்பது மக்களின் விருப்பம்.
முதல்வராக இருந்து ஒரு பைசா கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் பிரதமரானவர் மோடி. இந்த தேர்தலில் ஊடுருவல்காரர்களா அல்லது அகதிகளுக்கான சி.ஏ.ஏ., சட்டமா என்பதையும், நமக்கு தேவை வளர்ச்சியா இல்லை போராட்டமா என்பதையும் மேற்கு வங்க மக்கள் முடிவு செய்யட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.