போர்க்களத்துக்கு போகலாம் 'ஜாலி டூர்': செயலி வெளியிட்டு அழைக்கிறது அரசு
போர்க்களத்துக்கு போகலாம் 'ஜாலி டூர்': செயலி வெளியிட்டு அழைக்கிறது அரசு
ADDED : ஜன 17, 2025 04:47 AM

புதுடில்லி: சியாச்சின், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய போர்க்களங்களுக்கு சுற்றுலா வரும்படி மத்திய அரசு அழைக்கிறது. இதற்கான பிரத்யேக செயலியை நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டு உள்ளார்.
மலை பிரதேசங்கள், கடற்கரை நகரங்கள், பழமையான கோவில்கள் அடங்கிய ஊர்களுக்கு மட்டும் தான் சுற்றுலா செல்ல வேண்டுமா என்ன? நம் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்கள் நடந்த யுத்த பூமிக்கு சுற்றுலா வாருங்கள் என்று அழைக்கிறது மத்திய அரசு.
இதற்காகவே, 'பாரத் ரன்பூமி தர்ஷன்' என்ற 'மொபைல் போன்' செயலியை, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். எந்தெந்த மாநிலங்களில் உள்ள போர்க்களங்களுக்கு சுற்றுலா செல்லலாம்; அதன் வரலாற்று சிறப்பு என்ன; எப்படி செல்வது? எவ்வாறு அனுமதி பெறுவது என்பது போன்ற விபரங்கள் அதில் அடங்கியுள்ளன.
நாட்டின் உயரிய போர்க்களமான சியாச்சின் சிகரம், 2020ல் இந்திய - சீன படையினர் மோதிக்கொண்ட கல்வான் பள்ளத்தாக்கு, 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்த லாங்கேவாலா, கார்கில் உள்ளிட்ட யுத்த பூமிகளுக்கு இனி சுற்றுலாச் சென்று பார்த்து வர முடியும். இது தவிர அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிபிதுா மற்றும் பம்லா, லடாக்கில் உள்ள ரேஸங்லா மற்றும் பாங்காங் ஸோ, சிக்கிமில் உள்ள சோ லா உள்ளிட்ட போர்க்களங்கள் குறித்த தகவல்களும் செயலியில் உள்ளன.
'உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களிடம் தேச பக்தியை வளர்ப்பது, நம் ராணுவத்தின் உண்மையான வரலாற்றை மக்களிடம் எடுத்து செல்வதே இந்த முயற்சியின் நோக்கம்' என, அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.