ADDED : பிப் 06, 2025 12:26 AM
சண்டிகர்:பஞ்சாபில், 1992ல் நடந்த போலி என்கவுன்டரில், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் அரசில் இடம் பெற்ற அமைச்சர் ஒருவரின் மகன் கொலை வழக்கில் பல்தேவ், லக்வீந்தர் ஆகியோர் 1992ல் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 1995ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த மொஹாலி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 33 ஆண்டுகளுக்கு பின் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
போலீசாரால் கொல்லப்பட்ட பல்தேவ், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் என சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்தது.
முன்னாள் அமைச்சரின் மகன் கொலை வழக்கில் தவறாக கைது செய்து, என்கவுன்டர் செய்யப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்களையும் சி.பி.ஐ., உறுதி செய்தது.
இதையடுத்து, முன்னாள் போலீஸ் அதிகாரிகள் குர்பிந்தர் சிங், பர்சோத்தம் சிங் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
போலி என்கவுன்டர் வழக்கில் தொடர்புடைய ஹர்பஜன், மொஹிந்தர் ஆகிய போலீஸ் அதிகாரிகள் வழக்கு விசாரணையின்போதே இறந்து விட்டனர்.
முன்னாள் டி.எஸ்.பி., எஸ்.எஸ். சித்து, முன்னாள் இன்ஸ்பெக்டர் சமன்லால் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.