ஆன்மிக நகரங்களில் மதுவுக்கு தடை! ம.பி.,யில் புதிய அறிவிப்பு
ஆன்மிக நகரங்களில் மதுவுக்கு தடை! ம.பி.,யில் புதிய அறிவிப்பு
ADDED : ஜன 24, 2025 08:45 AM

போபால்; மத்தியபிரதேசத்தில், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தலங்களாக கருதப்படும் 17 நகரங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 17 ஆன்மிக நகரங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் மோகன் யாதவ் கூறி உள்ளார்.
நரசிங்கபூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்ற போது இதை தெரிவித்தார். முதல்வர் மோகன் யாதவ் மேலும் கூறியதாவது;
ஆன்மிக நகரங்களின் புனிதத்தை காக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மத்திய பிரதேச மாநிலத்தில் எங்கெல்லாம் ராமர், கிருஷ்ணர் கோவில்கள் உள்ளதோ அங்கெல்லாம் மதுபானம் தடை செய்யப்படுகிறது.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும்.
இவ்வாறு மோகன் யாதவ் கூறினார்.
மத்தியபிரதேச முதல்வரின் அறிவிப்புக்கு பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி வரவேற்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் முதல்கட்டமாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

