மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்
மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்
ADDED : ஜன 15, 2024 08:16 PM

புதுடில்லி,: புதுடில்லியில் நடந்த மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது.இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்த முறைகேட்டில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக கடந்த 2022ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் கவிதா ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் மதுபான கொள்கை விவகாரத்தில் நடந்துள்ள பண மோசடி குறித்து ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்தாண்டு மார்ச்சில் கவிதாவிற்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் கடந்த 13-ம் தேதி கவிதாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்பி வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.