புல்வாமாவில் உயிரிழந்த வீரரின் மகள் திருமணம் தாய்மாமனாக பங்கேற்ற லோக்சபா சபாநாயகர்
புல்வாமாவில் உயிரிழந்த வீரரின் மகள் திருமணம் தாய்மாமனாக பங்கேற்ற லோக்சபா சபாநாயகர்
UPDATED : ஏப் 14, 2025 06:36 AM
ADDED : ஏப் 14, 2025 01:00 AM

கோடா:புல்வாமாவில், 2019-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரரின் மகள் திருமணத்தில், தாய்மாமனாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்று சடங்குகளை செய்தார்.
ஜம்மு- - காஷ்மீரின் புல்வாமா பகுதியில், 2019 பிப்., 14-ல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பாக்., பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில், ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜ் என்பவரும் ஒருவர். அப்போது அவரது மகள் ரீனா மீனாவுக்கு, 19 வயது.
ஹேம்ராஜின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கோடா லோக்சபா தொகுதி எம்.பி.,யான ஓம் பிர்லா, ஹேம்ராஜின் மனைவி மதுபாலாவுக்கு மூத்த சகோதரனாக இருந்து, அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
கோடா தொகுதியிலேயே தொடர்ந்து மூன்று முறை வென்று எம்.பி.,யாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக சபாநாயகராகவும் ஓம் பிர்லா இருக்கிறார்.
ஹேம்ராஜ் குடும்பத்துக்கு அளித்த வாக்குறுதியை மறக்காமல், ஆண்டு தோறும் ரக் ஷா பந்தன் தினத்தில் சகோதரனாக, அந்த குடும்பத்துக்கு பரிசுகளை வழங்குவதோடு, தேவையான உதவிகளையும் செய்து வந்தார்.
இந்நிலையில், ஹேம்ராஜின் மகள் ரீனா மீனா, 25, திருமணம், கோடா-பண்டி அருகே உள்ள சங்கோட் கிராமத்தில் நடந்தது. அதில், ஏற்கனவே உறுதி அளித்தபடி, மணப்பெண்ணுக்கு தாய்மாமன் முறையில் பங்கேற்று, அனைத்து திருமண சடங்குகளையும் ஓம் பிர்லா செய்தார்.
ராஜஸ்தானில், திருமணத்தின்போது, 'மைரா' என்ற சடங்கில் மணப்பெண்ணின் தாய்க்கு, அவரது சகோதரர் பரிசுகள் வழங்குவது வழக்கம். இதன்படி, மணப்பெண்ணின் தாயும் ஹேம்ராஜின் மனைவியுமான மதுபாலாவுக்கு சகோதரராக புடவை உள்ளிட்ட பரிசுகளை ஓம் பிர்லா வழங்கினார்.
திருமண நிகழ்வு முழுதும் ஒவ்வொரு சடங்கிலும் ஓம் பிர்லா பங்கேற்றார். முன்னதாக, திருமணத்துக்கு வந்த சபாநாயகருக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு மதுபாலா வரவேற்றார்.

