ADDED : பிப் 13, 2025 05:21 AM

ஹாவேரி: ஆசியாவின் நம்பர் 1, மிளகாய் மார்க்கெட் என்ற பெயர் பெற்ற பேடகி மார்க்கெட்டில் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது.
ஹாவேரி மாவட்டம், பேடகியில் உள்ள மிளகாய் மார்க்கெட், ஆசியாவின் நம்பர் 1 மிளகாய் மார்க்கெட் என்ற பிரசித்தி பெற்றதாகும். இந்த மார்க்கெட்டில் எடையில் மோசடி செய்து, விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தீவிரமாக கருதிய, உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், பேடகி மிளகாய் மார்க்கெட்டில் நேற்று சோதனை நடத்தினர்.
நீதிபதி வீரப்பா, ஒவ்வொரு கடைக்கும் சென்று ஆய்வு செய்தார். எடையில் வித்தியாசம் இருப்பதை கவனித்தார். பில் புத்தகத்திலும் குளறுபடி இருந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, ''ஆசியாவின் நம்பர் 1 மார்க்கெட் என, கூறுகிறீர்கள். ஆனால் இங்கு எடை இயந்திரமே சரியில்லை. ஏ.பி.எம்.சி., அலுவலகத்தில் உள்ள எடை இயந்திரத்திலும் வித்தியாசம் உள்ளது. உங்களுக்கும் மிளகாயில் பங்கு வருகிறதா,'' என, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
எடை இயந்திரங்களை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மிளகாய் மார்க்கெட் செயலர் சைலஜா உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

