ADDED : நவ 18, 2025 05:13 AM

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அச்சன் கோவில். இங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் ஐயப்பன். இவரது கையில் அதிசய வாள் உள்ளது. அதில் என்ன அதிசயம்?
முன்பொரு காலத்தில் பெரியவர் ஒருவர் அச்சன்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தார். இரவாகி விடவே அவருக்கு வழி தெரியவில்லை. 'சுவாமியே... ஐயப்பா... எனக்கு வழிகாட்டப்பா' என வேண்டினார்.
அப்போது அசரீரியாக, 'கவலைப்படாதீர். தற்போது வாள் ஒன்று தோன்றும். அது காட்டும் வழியில் செல்லுங்கள். கோயிலை அடைந்ததும் அதை சன்னதியில் சேர்த்து விடுங்கள்' என்றது. அதன்படி வாள் தோன்றியது. அது காட்டும் வழியிலேயே சென்று கோயிலை அடைந்தார். இந்த வாளின் அதிசயமே அதன் எடைதான். ஆம். இதை குழந்தை முதல் பலசாலி வரை துாக்கலாம். யார் துாக்கினாலும் அவர்களின் இயல்புக்கு ஏற்ப அதன் எடை மாறும்.
உற்ஸவ நாளில் தர்ம சாஸ்தாவுடன் இந்த வாளும் கொண்டு வரப்படும். அப்போது பக்தர்கள், 'சுவாமியே சரணம் ஐயப்பா' என சரண கோஷம் எழுப்புவர். இதை தரிசிப்பவர்கள் 'அச்சம் என்றால் என்ன' எனக் கேட்பார்கள்.

