மஹா., முதல்வர் யார் என்பதில் பிரச்னை இல்லை: சொல்கிறார் பட்னாவிஸ்
மஹா., முதல்வர் யார் என்பதில் பிரச்னை இல்லை: சொல்கிறார் பட்னாவிஸ்
UPDATED : நவ 23, 2024 04:28 PM
ADDED : நவ 23, 2024 04:25 PM

மும்பை: '' மஹாராஷ்டிரா முதல்வர் யார் என்பதில் கூட்டணியில் பிரச்னை ஏதும் இல்லை,'' என அம்மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்து உள்ளது. இம்மாநிலத்தில் தற்போது சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவரும், துணை முதல்வருமான பட்னாவிஸ் அளித்த பேட்டி: மஹாராஷ்டிரா மக்கள் வரலாறு காணாத வெற்றியை அளித்து உள்ளனர். பிரதமர் மோடி பக்கம் மக்கள் உள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக எங்களுக்கு ஓட்டுப் போட்டு உள்ளனர்.
மஹாயுதி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் ராம்தாஸ் அத்வாலேவுக்கு ஆகியோருக்கு கிடைத்த வெற்றி. ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. யார் முதல்வர் என்பதில் பிரச்னை இல்லை. ஒரே நாளில் மூன்று கட்சிகளும் அமர்ந்து பேசி பதவி குறித்து முடிவு செய்யப்படும். இதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். இதில் எந்த பிரச்னையும் இல்லை.
நான் தான் நவீன அபிமன்யூ என முன்னர் கூறியிருந்தேன். சக்கரவியூகத்தை எப்படி உடைப்பது என்பது எனக்கு தெரியும். இந்த வெற்றியில் எனது பங்கு மிகவும் குறைவு. இது எங்கள் அணியின் வெற்றி.
மக்கள் தங்கள் உத்தரவை வழங்கி உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே தான் உண்மையான முதல்வர் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கான அங்கீகாரத்தை அஜித்பவார் பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.