மஹாராஷ்டிரா தேர்தலில் முறைகேடா? காங்., புகாரை நிராகரித்தது கமிஷன்
மஹாராஷ்டிரா தேர்தலில் முறைகேடா? காங்., புகாரை நிராகரித்தது கமிஷன்
ADDED : டிச 25, 2024 02:24 AM

புதுடில்லி, 'மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை' என, காங்கிரசின் புகாருக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பதில் அளித்துள்ளது.
மஹாராஷ்டிரா சட்ட சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் மோசடிகள் நடந்ததாக, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன.
இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனில் நேரடியாக புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவு நாளன்று, மாலை 5:00 மணிக்கு வெளியிடப்பட்ட ஓட்டு சதவீதத்துக்கும், இறுதி ஓட்டு சதவீதத்துக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
மாலை 5:00 மணிக்கு வெளியிடப்படும் ஓட்டு சதவீதம் இறுதியானது அல்ல. ஓட்டுப் பதிவு மாலை 5:00 மணிக்கு முடிந்தாலும், ஓட்டுச் சாவடிகளில் காத்திருக்கும் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால்தான், இறுதி ஓட்டுச் சதவீதம் அதிகமாக உள்ளது.
அதுபோல, அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த முறை, 8,00,391 வாக்காளர்கள் பல காரணங்களுக்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பார்த்தால், சராசரியாக ஒரு தொகுதிக்கு, 2,779 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். புகாரில் கூறியபடி, அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்படவில்லை.
அதுபோல, 50 தொகுதிகளில், தலா, 50,000 பேர் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுவது உண்மையில்லை; அடிப்படை ஆதாரமற்றது.
தேர்தல்களை வெளிப்படையாக நடத்தவே தேர்தல் கமிஷன் விரும்புகிறது. தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்த, கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிவித்தால் வரவேற்கிறோம். அதே நேரத்தில், தவறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவதை கட்சிகள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.