லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டம்; டி.ஜி.பி., தலைமையில் குழு அமைத்தது மகாராஷ்டிரா
லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டம்; டி.ஜி.பி., தலைமையில் குழு அமைத்தது மகாராஷ்டிரா
ADDED : பிப் 15, 2025 05:49 PM

மும்பை: லவ் ஜிஹாத் என்ற பெயரில், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதற்கு எதிரான சட்டம் கொண்டு வர மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென டி.ஜி.பி., தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
லவ் ஜிஹாத் என்ற பிரச்னை, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது. காதலித்து திருமணம் செய்த பெண்ணை, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது தான் இந்த பிரச்னையின் அடிப்படை.இதை தடுக்கும் நோக்கத்துடன் சட்டம் கொண்டு வர ஆலோசித்துள்ள மகாராஷ்டிரா அரசு, டி.ஜி.பி., தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
இந்த குழுவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, சட்டம், நீதித்துறை, சமூக நீதி, உள்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.கட்டாயப்படுத்தி செய்யப்படும் மதமாற்றங்கள், லவ் ஜிஹாத் புகார்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளை இந்த குழு வழங்கும். இதை தடுப்பதற்காக ஏற்கனவே உள்ள சட்டங்களையும் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும்.
மகாராஷ்டிராவில், ஷ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது பெண், அவரை காதலித்த அப்தப் பூனாவாலா என்பவரால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், லவ் ஜிஹாத் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அப்போது முதல், இதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது குழு அமைக்கும் முடிவுக்கு, எதிர்க்கட்சியான சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

