மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: 'பவருக்காக' இணையும் 'பவார்'கள்
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: 'பவருக்காக' இணையும் 'பவார்'கள்
ADDED : டிச 30, 2025 01:07 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் நடக்கும் மாநகராட்சி தேர்தலில், அம்மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரசின் தலைவருமான அஜித் பவார், தேசியவாத காங்., சரத் சந்திர பவார் அணியின் தலைவர் சரத் பவாருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதன்மூலம், பவார் குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.
கூட்டணி
எதிர்க்கட்சிகளான காங்., - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' 50க்கும் குறைவான உள்ளாட்சி அமைப்புகளையே கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட, மஹாராஷ்டிராவில் உள்ள, 29 மாநகராட்சிகளுக்கு, வரும் ஜன., 15ல் தேர்தல் நடக்கிறது; 16ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில், இரண்டு கூட்டணிகளிலும் உள்ள கட்சிகள் பல புதிய கூட்டணிகளை உருவாக்கியுள்ளன.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உத்தவ் சிவசேனாவும், அவரது சகோதரரான ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்துள்ளன. பா.ஜ., மற்றும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கூட்டணி அமைத்துள்ளன. சிறிய கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், அஜித் பவாரின் தேசியவாத காங் கிரசும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் -- சரத் சந்திர பவார் பிரிவும், மஹாராஷ்டிராவின் பிம்ப்ரி - சின்ச்வட் மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையே, புனே உட்பட மற்ற மாநகராட்சித் தேர்தல்களிலும் இரண்டு தேசியவாத காங்கிரஸ் பிரிவுகளுக்கும் இடையே கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முடிவு
முன்னதாக, மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள 37 வேட்பாளர்களின் பெயரை தேசியவாத காங்., முதற்கட்டமாக அறிவித்துள்ளது. இது மாநிலத் தலைநகரில் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதைக் காட்டுகிறது.
தேசியவாத காங்கிரஸ் நிறுவனரான சரத் பவாரின் சகோதரரின் மகன் தான் அஜித் பவார். கடந்த, 2023ல் கட்சிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி, தனியாக பிரிந்து சென்றார். இதைத் தொடர்ந்து, கட்சியின் பெயர், சின்னம் அவருக்கு கிடைத்தது.

