ஒடிசா மண்ணின் மைந்தனே முதல்வராவார்: தேதி, நேரம் குறித்த வி.கே.பாண்டியன்
ஒடிசா மண்ணின் மைந்தனே முதல்வராவார்: தேதி, நேரம் குறித்த வி.கே.பாண்டியன்
ADDED : மே 29, 2024 11:04 AM

புவனேஸ்வர்:
''ஒடிசா மண்ணின் மைந்தன் ஜூன் 9ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1
மணிக்குள் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என 5டி திட்ட தலைவரும், பிஜூ ஜனதா
தளம் கட்சியின் மூத்த தலைவரும், தமிழருமான வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.
ஒடிசாவில்
சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் சேர்த்து 4 கட்டங்களாக
நடைபெறுகிறது. இதில் 3 கட்டங்கள் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்தல்
வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆட்சியில் இருக்கும் பிஜூ ஜனதா
தளத்திற்கும் பா.ஜ.,வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. முதல்வர் நவீன்
பட்நாயக்கின் தனிச்செயலாளராக இருந்த தமிழரான வி.கே.பாண்டியன், ராஜினாமா
செய்து, பின்னர் அவரது கட்சியில் சேர்ந்து பிஜூ ஜனதா தளத்திற்கு ஆதரவான
பிரசாரத்தை வழிநடத்தி வருகிறார்.
நவீன் பட்நாயக்கின் அரசியல்
வாரிசாக அறியப்படும் வி.கே.பாண்டியன், இந்த தேர்தலில் நிற்கவில்லை
என்றாலும், அவரே முதல்வரையும் ஆட்சியையும் வழிநடத்துவதாக பா.ஜ.,
குற்றம்சாட்டி வருகிறது. வயதை காரணம்காட்டி நவீன் பட்நாயக்
ஓய்வெடுத்துவிட்டு, வி.கே.பாண்டியன் ஆட்சியை கவனிப்பார் என்றும்
விமர்சிக்கின்றனர். இதனை மனதில் வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
ஒடிசாவைத் தமிழர் ஆள அனுமதிக்க முடியாது எனப் பேசி வருகிறார். அதோடு,
ஒடியா மொழிப்பேசும் இளம் தலைவரை தான் முதல்வராக்குவோம் என்றும்
உறுதியளித்தார்.
தேதி, நேரம்
தமிழரான வி.கே.பாண்டியனை குறிவைத்து
முன்னெடுக்கப்படும் பிரசாரத்தை பா.ஜ., கையிலெடுத்துள்ளதை ஒடிசா மக்கள்
எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது ஜூன் 4ல் தேர்தல் முடிவின்போது
தெரியவரும்.
இது தொடர்பாக வி.கே.பாண்டியன் கூறுகையில், ''ஜூன் 9ம் தேதி
எங்கள் அரசு மீண்டும் ஆட்சியில் அமரும். ஒடியா மொழி பேசுபவராக
மட்டுமல்லாமல், இம்மாநில மக்களின் இதயங்களில் வாழ்பவரே முதல்வராக
இருப்பார். ஜூன் 9ல் காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள், இந்த
மண்ணின் மைந்தன் முதல்வராக பொறுப்பேற்பார்'' என பதிலளித்தார்.