பொன்னம்பலமேட்டில் காட்சி தந்தது மகர ஜோதி; சபரிமலையில் சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பலமேட்டில் காட்சி தந்தது மகர ஜோதி; சபரிமலையில் சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 14, 2026 06:54 PM

சபரிமலை: சபரிமலை பொன்னம்பலமேட்டில் இன்று மாலை மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
சபரிமலையில் மகர விளக்கு காலத்தின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று மாலை 6.42 மணிக்கு தெரிந்தது. சரணம் பாடி உருகி,தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார் ஐயப்பன்.
இதற்கு முன்பாக மகர சங்கரம பூஜை இன்று மாலை 3:08 மணிக்கு நடந்தது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து தூதர் மூலம் கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் நேரடியாக அபிஷேகம் செய்யப்பட்டது.
இதற்காக இன்று மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் 2:45 மணிக்கு திறக்கப்பட்டது. 3:08 மணிக்கு மகர சங்கரம நெய்யபிஷேகம் நடைபெற்றது.
பந்தளத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் பெரிய நடைப் பந்தல் வழியாக 6:25 மணிக்கு திருவாபரணம் சன்னிதானம் வந்தடைந்தது. தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து, மாலை, ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்தினர்.
ஜோதி தரிசனம்:
இந்த நேரத்தில் கோயில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசித்ததை தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி தந்தது.
பக்தர்கள் அதை பார்த்து வணங்கி ஆனந்தம் அடைந்து, சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர்.
ஜோதி தரிசனத்திற்காக, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஏற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தது.

